/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் வளாகத்துக்கு நிதி ஒதுக்கியும் பணி துவங்கவில்லை! திறப்பதற்கு முன்பே பொலிவிழக்கிறது
/
கோர்ட் வளாகத்துக்கு நிதி ஒதுக்கியும் பணி துவங்கவில்லை! திறப்பதற்கு முன்பே பொலிவிழக்கிறது
கோர்ட் வளாகத்துக்கு நிதி ஒதுக்கியும் பணி துவங்கவில்லை! திறப்பதற்கு முன்பே பொலிவிழக்கிறது
கோர்ட் வளாகத்துக்கு நிதி ஒதுக்கியும் பணி துவங்கவில்லை! திறப்பதற்கு முன்பே பொலிவிழக்கிறது
ADDED : ஜூலை 11, 2024 09:57 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமானப்பணிக்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இன்னும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இதனால், கோர்ட் வளாகம் முழுவதும் புதர்கள் மண்டி காணப்படுகிறது.
பொள்ளாச்சியில், கோர்ட்கள் அனைத்தும், ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என, அரசுக்கும், சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, கடந்த 2016ல், கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டது.
கோர்ட் வளாகம் அமையும் இடத்தை, மாவட்ட நீதிபதி பார்வையிட்டு, நில அளவுகளை இறுதி செய்து ஐகோர்ட் நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார். அதன்பின், கோர்ட் வளாக அமைப்பு திட்டமிடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி செய்யப்பட்டது.
இறுதி கட்ட வரைபடத்தில், 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. மொத்தம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்றன.
இப்பணிகளை தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக, 15 கோடி ரூபாய் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக நிதி கேட்டு பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் தமிழ அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு ஏதுவாக, 14 கோடியே, 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் வந்ததால், பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தற்போது, தேர்தல் முடிந்த நிலையிலும் பணிகள் மேற்கொள்ளாததால், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் புதர் மண்டி காணப்படுகிறது.விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, கோர்ட் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளதாக புகார் எழுந்தது.
தற்போது, புதர் மண்டி காணப்படும் கோர்ட் வளாகம்பொலிவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

