/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடுமன்பாறையில் அடிப்படை வசதியில்லை
/
உடுமன்பாறையில் அடிப்படை வசதியில்லை
ADDED : அக் 02, 2025 12:01 AM
வால்பாறை; உடுமன்பாறை செட்டில்மென்ட் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது உடுமன்பாறை செட்டில்மென்ட். இங்குள்ள காடர் பழங்குடியின மக்கள், வால்பாறை தாசில்தார் அருள்முருகனிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட உடுமன்பாறை காடர் பழங்குடியின கிராமத்தில், 40 குடும்பங்கள் கடந்த நான்கு தலைமுறையாக வசிக்கிறோம். வசிக்கும் பகுதிக்கு செல்ல ரோடு வசதி இல்லை.
இதனால், முதியவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட இரண்டு கி.மீ.,துாரம் தொட்டில் கட்டி துாக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரோடு வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமலும், முதியோர், பெண்கள் அத்தியாவசியப்பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, உடுமன்பாறைக்கு வாகனங்கள் சென்று வர வசதியாக முதல் கட்டமாக தற்காலிக ரோடு அமைக்க வேண்டும். கிராமத்தில் மின் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற பகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், உடுமன்பாறையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.