குடிநீர் பிரச்னை இனி இருக்காது: தளபதி முருகேசன் உத்தரவாதம்
குடிநீர் பிரச்னை இனி இருக்காது: தளபதி முருகேசன் உத்தரவாதம்
ADDED : ஏப் 17, 2026 08:44 PM

சூலூர்: ''சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றிய ஊராட்சிகளில் ரூ.7 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்து, குடிநீர் பிரச்னைக்கு முற்றிலும் தீர்வு கண்டிருக்கிறோம்,'' என, சூலூர் தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.
தி.மு.க., வேட்பாளர் ஏற்கனவே செய்த சாதனைகளைக் கூறியும், இனியும் சொன்னதைச் செய்வோம் என நம்பிக்கை அளித்தும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:
சூலூருக்கு நெல்லித்துறையில் இருந்து முதல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 1990ல் துவங்கப்பட்ட திட்ட குழாய்கள் பழுதடைந்ததால் அடிக்கடி உடைந்து, குடிநீர் வினியோகம் தடைபட்டது. தி.மு.க., ஆட்சியில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு பெற்று, 11 கி.மீ., தூரத்துக்கு புதிய குடிநீர் குழாய்கள் போதிய அளவில் பதிக்கப்பட்டன.
அதிக அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்கு தரமான குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதால், குழாய்களில் உடைப்பே வராது. இதனால், கண்ணம்பாளையம் பேரூராட்சி, கள்ளப்பாளையம், பள்ளபாளையம், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய கிராமங்கள், போகம்பட்டி, பீடம்பள்ளி, பாப்பம்பட்டி போன்ற பகுதிகளுக்கு, குடிநீர் இனி தடையின்றி வினியோகிக்கப்படும்.
ஒரு வாரம், 10 நாள் என இருந்தது இனி போதிய அளவு தடையின்றிக் கிடைக்கும். மக்களின் தாகம் தீர்த்திருக்கிறோம். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் பெண்கள் சுயமாக நிற்க, உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
பஸ்களில் இலவச பயணம் செய்ய முடிகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். அதைச் சீர்குலைக்க அ.தி.மு.க.,வின் முகமூடியை அணிந்துகொண்டு மதவாத சக்திகள் வருகின்றன. அவர்களை அனுமதிக்கக்கூடாது.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கும் மிகச்சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்துவோம் எனக் கூறிய ஸ்டாலின் அதனை கோவை மாவட்டத்தில் நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார்.
அவரது ஆட்சி 2வது முறையாகத் தொடரும். நாங்கள் அறிவித்த திட்டங்களை மட்டுமல்லாது, காலத்தின் தேவை கருதி, மக்களுக்காக அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவோம் என உறுதியளிக்கிறேன். சூலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
