/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி
ADDED : ஜன 05, 2024 01:01 AM

கோவை;'தினமலர்' நாளிதழ் மாணவர்கள் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த, ' பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்கள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான, ' நாசா' வுக்கு நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், மெகா வினாடி-வினா போட்டி, 2018ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150 பள்ளிகளில் நடக்கிறது. இப்போட்டிகளை கோலோ நிறுவனம் மற்றும் சத்யா ஏஜென்சி இணைந்து வழங்குகிறது.
என்.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
நீலிக்கோனாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள, என்.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில் , 100 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது.
இதில், 'சி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தக்சத்தா, பத்தாம் வகுப்பு மாணவி சபித்தா ஆகியோர் அதிக புள்ளிகளுடன் அரை இறுதிபோட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள்சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி
பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில், தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வு போட்டியில், 360 பேர் பங்கேற்றனர். இதில், சிறப்பாக எழுதிய 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது.
இதில், ' பி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் அச்யுத் ரென்ஜித், பொலிலன் ஆகியோர் அதிக புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பள்ளி முதல்வர் கீதா வழங்கி வாழ்த்தினார்.
நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி
பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில், தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வு போட்டியில், 725 பேர் பங்கேற்றனர். இதில், சிறப்பாக எழுதிய 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது.
கால் இறுதி சுற்று முடிவில், 'ஜி' அணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் விவேக், ஏழாம் வகுப்பு மாணவன் கவுசியன் ஆகியோர் அதிக புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை முதல்வர் பேபி பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.