/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு வாகனம் கவிழ்ந்து பழங்குடியினர் மூவர் பலி: 19 பேர் படுகாயம்; வேலைக்கு சென்ற போது விபரீதம்
/
சரக்கு வாகனம் கவிழ்ந்து பழங்குடியினர் மூவர் பலி: 19 பேர் படுகாயம்; வேலைக்கு சென்ற போது விபரீதம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து பழங்குடியினர் மூவர் பலி: 19 பேர் படுகாயம்; வேலைக்கு சென்ற போது விபரீதம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து பழங்குடியினர் மூவர் பலி: 19 பேர் படுகாயம்; வேலைக்கு சென்ற போது விபரீதம்
ADDED : ஜூலை 18, 2025 12:19 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்ததால், வாகனத்தில் நின்று கொண்டு பயணித்த பழங்குடியினர் மூவர் இறந்தனர். மேலும், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நவமலை பழங்குடியின குடியிருப்பை சேர்ந்த, ஆறு பெண்கள் உள்ளிட்ட, 22 பேர், நேற்று காலை, 8:20 மணிக்கு டி.என்.26ஏடி 8715 என்ற பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தில், நெகமம் காட்டம்பட்டிக்கு பி.ஏ.பி., கால்வாய் துார்வாரும் பணிக்காக சென்றனர்.
வாகனத்தை நவமலை பகுதியை சேர்ந்த தேவபாலன்,23, என்பவர் ஓட்டினார். சின்னார்பதி அருகே கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. அதில், நின்று கொண்டு பயணித்த அனைவரும் துாக்கி வீசப்பட்டனர். ஆழியாறு போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், ராணி,45, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திலகராஜ்,40, இறந்தார். காயமடைந்த, 20 பேரும் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பப்பட்டனர்.
அதில், ஆபத்தான் நிலையில் இருந்த சாந்தி,52, மணி,40, மாங்கரை,40, காளியம்மாள்,30, ராஜாத்தி, 28, சஞ்சய்,20 ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த, சஞ்சய் இறந்தார். படுகாயமடைந்த, மற்ற 19 பேர், பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
விபத்து குறித்து, ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், வாகனத்தை ஓட்டியவருக்கு லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்ததுள்ளது.
டிரைவர் தேவபாலன் கூறுகையில், ''வாகனத்தை இயக்கும் போது, திடீரென, 'ஸ்டியரிங் லாக்' ஆனதால் பிரச்னை ஏற்பட்டது. பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது,'' என்றார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், ஆறுதல் கூறி, உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இது போன்று தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன், பழங்குடியின மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.