/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேமராக்கள் பொருத்தியும் குப்பை வீசுவது.. தொடர்கிறது! . அபராதம் விதிக்க மாநகராட்சி தயக்கம் ஏன்?
/
கேமராக்கள் பொருத்தியும் குப்பை வீசுவது.. தொடர்கிறது! . அபராதம் விதிக்க மாநகராட்சி தயக்கம் ஏன்?
கேமராக்கள் பொருத்தியும் குப்பை வீசுவது.. தொடர்கிறது! . அபராதம் விதிக்க மாநகராட்சி தயக்கம் ஏன்?
கேமராக்கள் பொருத்தியும் குப்பை வீசுவது.. தொடர்கிறது! . அபராதம் விதிக்க மாநகராட்சி தயக்கம் ஏன்?
ADDED : டிச 19, 2025 05:06 AM

கோவை குப்பை கொட்டினால் வீடு தேடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தியும், பெரும்பாலான கோவை மக்கள் கொஞ்சமும் அசராமல் வீதிகளில் குப்பை கொட்டுவதால் மாநகராட்சி விழிபிதுங்கி நிற்கிறது.
மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது, 'இ-வேஸ்ட்' என, தினமும் 1,200 டன் குப்பை சேர்கிறது. வெள்ளலுார் கிடங்கில் இக்குப்பை பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மாசு, துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை அப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர்.
இதையடுத்து, குப்பை மேலாண்மையை தீவிரப்படுத்திய மாநகராட்சி, பொது இடங்களில் குப்பை கொட்ட தடை விதித்தது. மீறினால் ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. கண்டபடி குப்பை கொட்டப்படும் இடங்கள் 'ஹாட்ஸ்பாட்' என அறிவிக்கப்பட்டு திரை போட்டு மூடியது. அறிவிப்பு 'பிளக்ஸ்'கள் கட்டியது. 400 இடங்களில் சி.சி.டி.வி. கேமராவும் பொருத்தப்பட்டு, ஆர்.எஸ். புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வளவு செய்தும் குப்பை கொட்டுவது நிற்கவே இல்லை. நஞ்சுண்டாபுரம் ரோட்டை ஒட்டிய வயல்வெளி, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி உள்ளிட்ட இடங்களில் லாரியில் வந்து, மொத்தமாக குப்பை கொட்டுகின்றனர். திருச்சி ரோடு மேம்பாலம் இறக்கத்தில் ஸ்ரீபதி அருகே 'வாகனங்களில் வந்து குப்பை கொட்டுபவர்களின் பதிவு எண்ணை வைத்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்' என அறிவிப்பு பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதையே கிழித்து எடுத்து குப்பையில் சேர்த்து வீசிவிட்டார்கள்.
இதேதான் நகரம் முழுதும் உள்ள நிலை. குப்பை கொட்டும் மக்களை மடக்கி கேட்டால், “வீட்டுக்கு வந்து குப்பை வாங்கி செல்வோம் என்றார்கள். ஆனால், தினமும் ஒழுங்காக வருவது இல்லை. கேட்டால், செம்மொழி பூங்கா வேலை, வாக்காளர் படிவ வேலை என்று ஏதாவது காரணம் சொல்கிறார்கள். வீட்டுக்குள் குப்பையை சேர்த்து வைக்க முடியுமா? அதனால் வெளியே கொட்டுகிறோம்” என்றனர்.
துாய்மை பணியாளர்களை விசாரித்தால், “ஆள் பற்றாக்குறை தான் முக்கிய காரணம். யாராவது லீவு எடுத்தால் மாற்று ஆள் கிடையாது. அதிகாரிகள் வேறு வேலைக்கு திருப்பி விட்டால் நாங்கள் எப்படி மறுக்க முடியும்?” என்றனர்.
இதுவரை எவ்வளவு அபராதம் வசூலாகி இருக்கிறது? என மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, உண்மை வந்து விழுந்தது. அபராத அறிவிப்பே வெறும் பூச்சாண்டி தானாம். அப்ப சரி.

