/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளின் உயிர் தோழனுக்கு.. ரொம்ப நன்றி! . மாட்டுப்பொங்கலன்று மரியாதை
/
விவசாயிகளின் உயிர் தோழனுக்கு.. ரொம்ப நன்றி! . மாட்டுப்பொங்கலன்று மரியாதை
விவசாயிகளின் உயிர் தோழனுக்கு.. ரொம்ப நன்றி! . மாட்டுப்பொங்கலன்று மரியாதை
விவசாயிகளின் உயிர் தோழனுக்கு.. ரொம்ப நன்றி! . மாட்டுப்பொங்கலன்று மரியாதை
ADDED : ஜன 17, 2026 05:03 AM

- -
தங்கள் உயிர்த் தோழனாக இருந்து உழைக்கும் கால்நடைகளை போற்றும் வகையில், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் மாட்டுப்பொங்கலை விமரிசையாக கொண்டாடினர்.
மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் வண்ணக் கயிறுகளையும், மணிகளையும் கட்டி அலங்கரித்தனர். மாட்டு கொட்டகைகளை அலங்கரித்தனர்.
பட்டியமைத்து அதில் தண்ணீர், பால், இளநீர் உள்ளிட்ட திரவியங்களையும் நவதானியங்களையும் இட்டு, மலர்களை துாவி மாலைகளை அணிவித்தனர்.
புதிய மூக்கணாங்கயிறு பூட்டிய மாடுகளை இழுத்துப்பிடித்து, பட்டிமிதித்து தாண்டி செல்ல வைத்தனர். மாட்டு கொட்டகைகளில் 'பட்டிபெருக' பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கும்போது 'பட்டிபெருக; பால் பானை பொங்க' என்று சொல்லி குலவையிட்டனர். பின்னர் வழிபாடு செய்து கால்நடைகளுக்கு பொங்கல் உணவளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு பொங்கலும், பழங்களும் கொடுத்து விவசாயிகள் அன்பை வெளிப்படுத்தினர். சுத்தம் செய்யப்பட்ட விவசாய கருவிகள், மாட்டுத் தொழுவங்கள், உழவுக் கருவிகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
அலங்கரித்த மாடுகளுடன் கோயிலுக்கு சென்று தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரையுடன் சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனர். கோவை தடாகம் சாலையிலுள்ள மாதேஸ்வரன் கோயிலில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு, கோபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
சித்தாபுதுார் அய்யப்பன் கோயில் கோசாலை மாடுகளுக்கு,தம்பதி சமேதராக நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்தினர். மாடுகளுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைத்து, மலர்களால் அலங்கரித்தனர். கற்பூர ஹாரத்தி காண்பித்து பொங்கல், பழங்களை வழங்கினர்.
மில்ரோடு சுக்கிரவார்பேட்டையிலுள்ளபசுவண்ணன் கோயிலில் நேற்று, நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளானோர் கால்நடைகளை அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள, நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடந்தன.
நமது நிருபர் குழு-

