/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்குப்புறவழிச்சாலையில் சுங்கச்சாவடிகள்! மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் ஆய்வு
/
மேற்குப்புறவழிச்சாலையில் சுங்கச்சாவடிகள்! மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் ஆய்வு
மேற்குப்புறவழிச்சாலையில் சுங்கச்சாவடிகள்! மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் ஆய்வு
மேற்குப்புறவழிச்சாலையில் சுங்கச்சாவடிகள்! மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் ஆய்வு
ADDED : ஜூன் 15, 2025 10:21 PM
கோவை; கோவை மேற்குப்புறவழிச்சாலையில் சுங்கச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
கோவையில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகருக்கு வெளியே சுற்றுவட்டச்சாலை அமைகிறது.
அதில், கோவை - பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையத்தில் முடிகிறது; 32.43 கி.மீ., துாரத்துக்கு, 15 வருவாய் கிராமங்கள் வழியாக, மேற்குப்புறவழிச்சாலை அமைகிறது. மூன்று 'பேக்கேஜ்'களாக பிரித்து, இப்பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது.
72 சதவீத பணிகள் ஓவர்
முதல் பேக்கேஜ் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 72 சதவீத பணிகள் முடிந்து விட்டன. ஆக., மாதத்துக்குள், 11.8 கி.மீ., துாரத்துக்கு ரோடு போடும் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டி மற்றும் மைல்கல் பகுதியில் கட்டப்படும் பாலம் பணியை, அக்., மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இரண்டாவது பேக்கேஜ்க்கு நிதி ஒதுக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால், தமிழக அரசு இன்னும் நிர்வாக அனுமதி தரவில்லை. இதற்கிடையே, மேற்குப்புறவழிச்சாலை அமையும் 32.43 கி.மீ., துாரத்துக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை ஆலோசித்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை இதற்கான ஆய்வை துவக்கியிருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மேற்குப்புறவழிச்சாலை உருவாக்க, நிலம் கையகப்படுத்த, ரோடு போடுவதற்கு, மேம்பாலங்கள் கட்டுவதற்கென பல கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.
அதனால், சுங்கச்சாவடிகள் அமைத்து வருவாய் ஈட்டுவது தொடர்பாக, ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். சாத்தியக்கூறுகள் இருந்தால் அமைக்கப்படும்; இல்லையெனில், கைவிடப்படும். முதல் பேக்கேஜ் இன்னும் சில மாதங்களில் முடியும்.
இரண்டாவது பேக்கேஜ் பணி, ஆணையம் வசம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் பரவுகிறது; அதிகாரப்பூர்வமாக இன்னும் உத்தரவு வரவில்லை' என்றனர்.