/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 22, 2025 11:30 PM

மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்பொன்முடியில் உள்ள, கிராம சேவை மையக் கட்டடத்தில், மகளிர் சுய உதவிக்குழு ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட கணக்காளர் மணிமேகலை தலைமை வகித்தார். காரமடை வட்டார மகளிர் திட்ட பயிற்சியாளர் மீனா பயிற்சி முகாமை துவக்கி வைத்து, பயிற்சி அளித்தார். இதில், 15 குழுக்களைச் சேர்ந்த, 30 மகளிர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், மகளிர் திட்ட உறுதி மொழி எடுத்தனர். முகாமில், மகளிர் குழுக்களுக்கு தமிழக அரசு என்னென்ன திட்டங்கள் அறிவித்துள்ளது. குழு நோட்டுகளை எவ்வாறு எழுதுவது. வரவு, செலவு கணக்குகளை எவ்வாறு எழுதுவது. எந்த தொழில் செய்தால் பயனுள்ள வகையில் லாபம் கிடைக்கும். எவ்வாறு கடன் பெறுவது என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.