/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி
/
குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி
ADDED : டிச 25, 2024 10:14 PM
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே தடாகம் வனப்பகுதியில் கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் துடியலூர் அருகே பன்னிமடையில் தனியார் பட்டா நிலத்தில், 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உட்கார்ந்த நிலையில் உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறையின் கால்நடை மருத்துவ குழு நடத்திய கூராய்வு பரிசோதனையில், பெண் யானை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இறந்த பெண் யானையின் குட்டி தனது தாயை தேடி, அதே பகுதியில் அலைந்து திரிந்து வருகிறது.
குட்டி யானையை இறந்த தாயின் உறவு யானைகளுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் முயன்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு குட்டி யானையை, தாயின் உறவு யானைகள் உள்ள கூட்டத்தில் மூன்று முறை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், குட்டி யானை கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து விட்டது.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில்,'பொதுவாகவே தாயை இழந்த குட்டி யானை தாயின் உறவுகளுடன் சேர முதலில் தயக்கம் காட்டும். பின்னர் ஒரு சில நாட்களில் தாயின் உறவு யானைகளுடன் இணைந்து தன் வாழ்க்கையை துவக்கும்.
குட்டி யானையை அதன் கூட்டத்துடன் இணைக்கும் பணி தொடர்ந்து நடக்கும்' என்றனர்.

