ADDED : ஜன 15, 2025 12:46 AM
கோவை; இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.
* தடாகம் சாலை, இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 64. இவர் இடையர் பாளையம் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வந்த ஆசிக், 21, நடந்து சென்ற முதியவர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
* சரவணம்பட்டி, கீரணத்தம் ரோட்டை சேர்ந்தவர் ஹரிஸ்வர், 29. இவர் கே.என்.ஜி.புதுார் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு லாரி, ஹரிஸ்வரின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் துாக்கி எறியப்பட்ட ஹரிஸ்வர் தலை, கை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.