/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.50 லட்சம் கொள்ளை மேலும் இருவர் சிக்கினர்
/
ரூ.50 லட்சம் கொள்ளை மேலும் இருவர் சிக்கினர்
ADDED : அக் 23, 2025 11:48 PM

தொண்டாமுத்தூர்: கோவையில், குறைந்த விலைக்கு 100 பவுன் நகை தருவதாகக்கூறி, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி, கம்பத்தை சேர்ந்தவர் விஜய், 28. இவரும், இவரது உறவினருமான பாண்டீஸ்வரனும்,33 இணைந்து, பழைய தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
இவ்விருவரும், கடந்த 2020ம் ஆண்டு, கஞ்சா விற்று வழக்கில் கைது செய்யப்பட்டு, கிளை சிறையில் இருந்த போது, மதுரையைச் சேர்ந்த தர்மா என்பவர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயும், தர்மாவும் கடந்த வாரம், இன்ஸ்டாகிராம் மூலம் பேசி உள்ளனர். அப்போது, தான் பழைய பழைய தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்வதாக விஜய் கூறியுள்ளார். இதனையடுத்து, தர்மா, கோவையில் ஒருவரிடம், 100 பவுன் தங்க நகை உள்ளதாகவும், அதை, 50 லட்சம் ரூபாய்க்கு நாம் பெற்று கொள்ளலாம் என தர்மா, விஜயிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி, விஜயும், பாண்டீஸ்வரனும், கடந்த, 18ம் தேதி, கோவைக்கு வந்துள்ளனர். அப்போது, தர்மா, விஜயை, நகை வாங்க செல்வதாகக்கூறி, கோவை, மேற்குபுறவழி சாலையில் மதுக்கரை நோக்கி காரில், அழைத்து சென்றிருந்தார்.
அப்போது, தர்மாவின் கூட்டாளிகள், எதிர்திசையில், காரில் அதிவேகமாக மோதுவது போல வந்துள்ளனர். தர்மா, காரில் இருந்து பணத்துடன் இறங்கி, எதிர்திசையில் வந்த தனது கூட்டாளிகளுடன் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.
விஜய் அளித்த புகாரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
அழகு பாண்டி, கோபி, முருகன், ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக இருந்த சிவகங்கையை சேர்ந்த அருண்குமார்,25, முத்துதமிழ்மாறன்,19 ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கொள்ளையடித்த பணத்துடன் தலைமறைவாக உள்ள தர்மா மற்றும் பிரபுவை தேடிவருகின்றனர்.

