/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; அலுவலக பணிகள் பாதிப்பு
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; அலுவலக பணிகள் பாதிப்பு
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; அலுவலக பணிகள் பாதிப்பு
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; அலுவலக பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 29, 2026 05:29 AM

பொள்ளாச்சி கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். < கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம், தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்ட தலைவர் மாயாவு தலைமை வகித்தார்.
அதில், கிராம நிர்வாக அலுவலகத்தில் கழிப்பிடம், குடிநீர், இணைய வசதியுடன் நவீனமயமாக்கப்பட வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. நேரடி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும்.
பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளது. 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாசரங்களுக்கு ஏற்ப, 30 சதவீதம் என்பதில் இருந்து, 50 சதவீதமாக மாற்றம் செய்ய வேண்டும். பதவி உயர்வுக்கான காலவரம்பை, ஆறு ஆண்டுகளில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைந்து அரசாணை வெளியிட வேண்டும்.
தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை தாசில்தார் நிலையில் ஊதியமும் வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் முன், கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் பாதிக்கப்பட்டது.

