/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத மண்டபங்கள்! கிராம மக்கள் அதிருப்தி
/
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத மண்டபங்கள்! கிராம மக்கள் அதிருப்தி
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத மண்டபங்கள்! கிராம மக்கள் அதிருப்தி
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத மண்டபங்கள்! கிராம மக்கள் அதிருப்தி
ADDED : ஏப் 28, 2025 11:02 PM
குடிமங்கலம்,; பெதப்பம்பட்டியில், அரசு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட திருமண மண்டபத்தை பயன்பாட்டுக்கு திறக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முன்பு, மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களில், சமுதாய நலக்கூடம் கட்டும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இந்த கூடங்களில், விசேஷங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வந்தது.
குடிமங்கலம், உடுமலை ஒன்றியங்களில், பெரும்பாலான சமுதாய நலக்கூடங்கள் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகங்களும், சமுதாய நலக்கூடங்கள் பராமரிப்பில் அக்கறை காட்டவில்லை.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், ஊராட்சி ஒன்றியங்களில், 'அம்மா' மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, இடத்தேர்வும் செய்யப்பட்டது. ஆனால், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
மாறாக, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பெதப்பம்பட்டி உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில், சமுதாய நலக்கூடம் அமைப்பில், திருமண மண்டபம் கட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பணிகள் நிறைவு பெற்றும் மண்டபங்கள், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
கிராம மக்கள் கூறியதாவது: கிராமப்புறங்களில், விசேஷங்களை நடத்த போதியளவு மண்டபங்கள் இல்லை. எனவே, சமுதாய நலக்கூடங்கள், வசதியில்லாதவர்களுக்கு மிகுந்த பயனளித்து வந்தது.
அந்த கூடங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. பெதப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில், கட்டி முடிக்கப்பட்ட திருமண மண்டபங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், முறையாக பராமரிக்கவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.