/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுர பாலாலயம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுர பாலாலயம்
ADDED : பிப் 16, 2024 01:03 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுரம் பாலாலயம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சியில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விசேஷ நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கும்பாபிேஷகம் நடந்து, 22 ஆண்டுகளான நிலையில் மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, கும்பாபிேஷகதுக்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, விமான கோபுர பாலாலயம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை, 5:30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, கலசஸ்தாபனம், முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை, 8:00 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் வழிபாடு காலை, 9:30 மணிக்கு இரண்டாம் கால யாகம் துவக்க பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், திரவியாஹுதி, பூர்ணாஹுதி, விமான கோபுரம் பாலாலயம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளின் சக்தி கண்ணாடியில் பிரதிஷ்டை செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பாலாலயம் செய்ததையடுத்து, கம்பம் பூஜை செய்து நடப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். செயல் அலுவலர்கள் கந்தசாமி, சீனிவாச சம்பத், ஆய்வர் பாக்கியவதி, பரம்பரை அறங்காவலர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.