/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
/
வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
ADDED : மார் 17, 2025 09:35 PM

வால்பாறை : வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
வால்பாறையில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு, அந்தந்த பகுதி அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
வால்பாறை நகர், முடீஸ், சோலையாறுநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் நேற்று துவங்கியது. வரும், 22ம் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. முகாமுக்கு குழந்தைகளை அழைத்து வந்து, வைட்டமின் 'ஏ' திரவம் செலுத்திக்கொள்ள வேண்டும் என, பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் கூறியதாவது: 'வைட்டமின் 'ஏ' என்ற உயிர்சத்து உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து. இது ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, தோல், திசு, எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஒன்றாகும்.
சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. வால்பாறை தாலுகாவில், ஐந்தாயிரம் குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்படவுள்ளது. இதனை, பெற்றோர் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.