/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
31 வரை தொழிற்பயிற்சி அட்மிஷன் நீடிப்பு
/
31 வரை தொழிற்பயிற்சி அட்மிஷன் நீடிப்பு
ADDED : ஆக 06, 2025 07:48 PM
வால்பாறை; வால்பாறை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 31ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
வால்பாறை மாணவர்கள் நலன் கருதி 2022-23ம் கல்வியாண்டு முதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. இருப்பினும் மொத்தம் உள்ள, 104 சீட்களுக்கு நேற்று வரை 35 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையத்தின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர தகுதி வாய்ந்த மாணவர்களை கண்டறியும் வகையில், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து வருகின்றனர். அவர்களை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆசிரியர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் கூறுகையில், ''தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உயர்கல்வி படிக்க முடியாத மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இம்மாதம், 31ம் தேதி வரை நேரடி அட்மிஷன் நடக்கிறது,'' என்றார்.