/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்கிங் சென்ற யானைகள்; விரட்டிய வனத்துறையினர்
/
வாக்கிங் சென்ற யானைகள்; விரட்டிய வனத்துறையினர்
ADDED : அக் 29, 2024 09:24 PM

வால்பாறை : வால்பாறையில், ரோட்டில் வாக்கிங் வந்த யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் செழுமையாக உள்ளதால், யானைகள் அதிகளவில் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, சிறுகுன்றா, வில்லோனி, சோலையாறு, தாய்முடி, அய்யர்பாடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன.
யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிட்டு, தொழிலாளர்களின் வீடுகள், பள்ளி சத்துணவு கூடம், ரேஷன் கடைகளை இடித்து சேதப்படுத்துகின்றன. யானைகள் வருகையால் இரவு நேரங்களில் எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் ரோட்டில் நேற்று காலை, குட்டிகளுடன் யானைகள் மெதுவாக நடந்து சென்றன. இதனால் இந்த வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், வாகனத்தில் 'சைரன்' ஒலிக்க செய்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், வாகன ஓட்டுநர்களும், எஸ்டேட் தொழிலாளர்களும் நிம்மதியடைந்தனர்.