ADDED : நவ 03, 2025 01:19 AM

மா நகராட்சி வடக்கு மண்டலம், 26வது வார்டில் வி.கே.ரோடு, எல்லைத் தோட்டம் ரோடு, பயனீர் மில் ரோடு, பி.கே.டி. நகர், ஹட்கோ காலனி மெயின் ரோடு, காவலர் குடியிருப்பு, பட்டாளம்மன் கோவில் வீதி, செங்காளியப்பன் நகர், முருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் துக்கினார் வீதி, ரங்கம்மாள் வீதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடு புனரமைக்கப்படாததால், மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
பீளமேடு ரயில்வே பாலத்தின் கீழ், கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டில் இருக்கும் 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இங்கு மது குடித்துவிட்டு ரயில் தண்டவாளத்தை கடப்பவர்கள் உயிரிழப்பது தொடர்கிறது. காலை, மாலை நேரங்களில், பள்ளி மாணவர்கள் இந்த தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். எனவே, ரயில்வே பாலத்தின்கீழ் சுரங்கப்பாதை தேவை என்பது, பிரதான கோரிக்கை.
பெருக்கெடுக்கும் கழிவுநீர் பட்டாளம்மன் கோவில் வீதி, விளாங்குறிச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பிரதான சாக்கடை வழியாக வரும் கழிவுநீர், தாழ்வான அண்ணாதுரை காலனி குடியிருப்புகளுக்குள் புகுகிறது. சிறு மழை பெய்தாலே உள்ளே இருக்க முடியாது. சாக்கடை கால்வாயை ஆழப்படுத்துவதுடன், அவிநாசி ரோட்டை ஒட்டி, இக்கழிவுநீர் செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். -ரவி (சுயதொழில்)
நேரு நகரில் சாக்கடை வசதி இல்லாத இடங்களில் கட்டித்தர வேண்டும். கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுத்து வீட்டு கழிவறைகளுக்குள் தேங்குகிறது; துர்நாற்றம் தாங்க முடிவதில்லை. கொசு தொல்லையும் இங்கு அதிகம். இப்பகுதி முழுவதும் சாக்கடை கழிவுநீர் செல்ல கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். -செல்வி (இல்லத்தரசி)
மின்கம்பத்தால் திக்... திக்... எல்லைத்தோட்டம் 4வது வீதியில் சாக்கடைக்கு நடுவே, மின் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அடைப்பு ஏற்பட்டு, இங்குள்ள குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுகிறது. தினமும் தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. சாக்கடை வாட்டமாகவும் இல்லை. மின் கம்பத்தை அகற்றுமாறு முறையிட்டால், மின் வாரிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. -கலையரசி (இல்லத்தரசி)
பாலகுரு கார்டனில் இருந்து பி.எப்.குடியிருப்பு வழியாக அவிநாசி ரோட்டை, 200 மீட்டரில் அடைந்துவிடலாம். ரோடு அமைப்பதற்கான இடத்தை தனியார் சிலர் வழங்க முன்வந்துள்ளனர். வருங்கால வைப்புநிதி அதிகாரிகளுடன் மாநகராட்சி நிர்வாகம் பேசி இடத்தை பெற்று, திட்டசாலை அமைத்தால், சுற்றி அலைய வேண்டியதில்லை. -பாலன் (கார் ஒர்க் ஷாப்)
ராஜிவ் நாயுடு லே-அவுட்டில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு, 50 ஆண்டுகளாக வசதி இல்லை. மழை காலத்தில் சிரமங்களை சந்திக்கிறோம். 200 மீட்டரில் செங்காளியப்பன் நகரை கடக்கும் கால்வாயில் கழிவுநீர் செல்ல, குழாய் அமைத்தாலே போதுமானது. - முத்து வாசுகிநாதன் (பார்மஸி பணி)
அடுக்குமாடி குடியிருப்பு பயனீர் மில் ரோட்டில் உள்ள துாய்மை பணியாளர் குடியிருப்பில், 24 வீடுகள் முன்பு இருந்தது. தற்போது, 108 ஆக குடும்பங்கள் அதிகரித்துள்ளன. மின் வசதி போதியளவில் இல்லை; குடிநீர் குழாய் இரண்டு மட்டுமே உள்ளது. தங்க இடம் இல்லாததால் இரவில் வெளியே துாங்குகிறோம். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு பயமாக இருக்கிறது. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரஸ்வதி (துாய்மை பணியாளர்)

