/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் பிரச்னை; மக்கள் மறியல்
/
தண்ணீர் பிரச்னை; மக்கள் மறியல்
ADDED : ஜன 27, 2025 12:38 AM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காலனிபுதுார் பகுதியில் தண்ணீர் வராததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தோலம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கோபனாரி, பட்டிசாலை, சீங்குலி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர், காலனி புதுார், செங்குட்டை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் 1,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றன.
கேரளா மாநில எல்லையில் இந்த மலை கிராமங்கள் அமைந்துள்ளன. உப்பு தண்ணீர் கூட காலனிபுதூர் பகுதி மக்களுக்கு ஒரு மாதமாக ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் நேற்று காலனிபுதுாரில் கோபனாரி சாலையில், காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மக்களின் சாலை மறியலை அடுத்து காரமடை போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
---