/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்!
/
வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்!
வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்!
வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்!
ADDED : ஏப் 10, 2025 09:56 PM
வால்பாறை, ; ஆனைமலை புலிகள் காப்பகத்தில், மனித -- வனவிலங்கு மோதலை தடுக்க தொழிலாளர்களின் வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில், சமீப காலமாக வால்பாறையில் மனித - வனவிலங்கு மோதலால் உயிரிழப்பு ஏற்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு, சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
குறிப்பாக, யானை, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளால், கடந்த, 20 ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனிடையே, வனத்துறையினர் இயற்கை பாதுகாப்பு அமைப்பு என்ற தனியார் அமைப்புடன் இணைந்து செயல்படுவதால், சமீப காலமாக மனித -- வனவிலங்கு மோதல் படிப்படியாக குறைந்து வருகிறது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில், மனித - வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண, தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழை பயிரிடக்கூடாது. அதே போல் சிறுத்தைக்கு பிடித்தமான ஆடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது.
தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள புதர்களை அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் அகற்ற வேண்டும். தனித்தனியாக உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியை, ஒருங்கிணைக்கும் வகையில் ஒரே இடத்தில் வீடுகள் கட்ட வேண்டும்.
இயற்கை வளங்களையும், வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினருடன் எஸ்டேட் நிர்வாகங்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, மனித - வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு, கூறினர்.