ADDED : மார் 20, 2026 09:56 PM

பெ.நா.பாளையம்: 'ஓட்டுக்கள் விற்பனைக்கு அல்ல' என, தன்னார்வ தொண்டு நிறுவன நிகழ்ச்சியில், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில், 'தேசிய மனித மேம்பாட்டு மையம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், ரோட்டரி சங்க சமுதாய குழுவினருடன் இணைந்து, தமிழக சட்டசபை தேர்தலுக்கான விழிப்புணர்வு முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார்.
தமிழ்நாடு கிராம கதர் தொழில் வாரிய, ஓய்வு பெற்ற மேலாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''தற்போது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் முழுவதுமாக பின்பற்றி நடக்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையில், தங்களுடைய ஓட்டுகளை பயன்படுத்த வேண்டும். ஓட்டளிக்க யாரிடமும், பணமாகவோ, பொருளாகவோ, பரிசாகவோ எதையும் பெறாமல், நம் மாநிலத்தை ஆளப்போகும் பிரதிநிதிகளுக்கு சுயமாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க வேண்டும்,'' என்றார்.
வாக்களிப்பது குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்கள் ஒன்றிணைந்து, 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என உறுதிமொழி ஏற்றனர். பெண்கள் மற்றும் சமுதாய குழு உறுப்பினர்கள் உட்பட, 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை, தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்திருந்தார்.
