/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராம்நகர் கோதண்ட ராமருக்கு திருக்கல்யாண வைபவம்
/
ராம்நகர் கோதண்ட ராமருக்கு திருக்கல்யாண வைபவம்
ADDED : ஜன 22, 2025 11:55 PM

கோவை; அயோத்தி ராமர் கோவில் கட்டி, ஓராண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், சீதா ராமர் திருக்கல்யாண வைபவம், பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்திலுள்ள, அபிநவவித்யாதீர்த்த பிரவசன மண்டபத்தில் சீதாராமர் கல்யாண வைபவம், வைதீக முறைப்படி பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
சீதா கல்யாண வைபவத்தையொட்டி, ராம்நகர் கோதண்டராமர் கோவில் சாலையே விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவில் நுழைவுவாயில், வாழைமரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கோவில் கருவறையிலிருந்து, அபிநவவித்யாதீர்த்த பிரவசன மண்டபத்துக்கு, ராமர் பட்டாபிஷேக உற்சவர், பக்தர்கள் சூழ சீர் வரிசைகளுடன் சென்றனர். மணமகன், மணமகள் என இருதரப்பினரும், மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.
கோதண்டராமர் கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாச பட்டர் தலைமையில், திருக்கல்யாண வைபவம் துவங்கியது.
பெண்பார்த்தல், நிச்சயதாம்பூலம், மாலைஅணிவித்தல், திருமண வைபவச் சடங்குகள் நடைபெற்றன. கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகியன வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடந்தது.
தொடர்ந்து மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல், சூரியநமஸ்காரம், மொய்பணம் சமர்ப்பித்தல், விருந்து பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்து வைபவங்களும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

