/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் என்னாச்சு?
/
திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் என்னாச்சு?
ADDED : ஜூலை 01, 2025 10:09 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோவிந்தாபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை கூடாரம் பயன்பாடின்றி புதர் சூழ்ந்து காணப்படுகிறது.
கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களிடம் இருந்து, நாள்தோறும் வீடு வீடாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பையை முறையாக தரம் பிரிக்காமல், ஆங்காங்கே கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.
இதை தவிர்க்க, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. குப்பை சேகரித்து அதை தரம் பிரித்து அகற்ற வேண்டும். ஆனால் இங்கு இதை கடைபிடிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெரியாக்கவுண்டனூர் செல்லும் ரோடு அருகே, திடக்கழிவு மேலாண்மை கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடாரத்தின் மேல் இருக்கும் தகர ஷீட்டுகள் இல்லாமல், கம்பிகள் துருப்பிடித்து, புதர் சூழ்ந்து பயன்பாடின்றி காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
பல ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படுவதில்லை. அரசு அனைத்து ஊராட்சிகளிலும் நிதி ஒதுக்கினாலும், இத்திட்டத்தை செயல்பாடின்றி, கட்டமைப்புகள் பாழாகி வருகிறது.
இதை சரி செய்ய, ஒன்றிய அதிகாரிகள் அவ்வப்போது குப்பை தரம் பிரிப்பு, திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.