/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
/
முதியவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
UPDATED : மார் 10, 2024 10:47 AM
ADDED : மார் 09, 2024 08:50 PM

முதுமை!
மற்றுமோர் குழந்தைப்பருவம்.
சொன்னது மறக்கும்,
சொன்னதையே திரும்ப
சொல்ல வைக்கும்.
நிறைய பேச வைக்கும்
பேசாமல் அடம்பிடிக்கவும் வைக்கும்...!
-- தனித்து விடப்படும் முதியோர்களை மீட்டு, பிரத்யேக இல்லத்தில் தங்க வைத்து, அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து வரும், ஈரநெஞ்சம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் மகேந்திரன், தனிமையில் இருக்கும் முதியோரின் எதிர்பார்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
ஐ.நா., சபையின், 'மக்கள் தொகை நிதியம்' அமைப்பு, 'இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்' என்ற பெயரில், சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், 60 வயதுக்கு மேல், 14.9 கோடி பேர் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இது, 10.5 சதவீதம். இது வெறும் கணக்கெடுப்புதான்.
ஆனால், முதுமையை வயதின் அடிப்படையில் கணக்கிட முடியாது. 40 வயதிலே, தன் கடமைகளை முடித்து விடுபவர்கள், முதுமையை உணரத் தொடங்குகின்றனர்.
நம்மை வளர்த்து, ஆளாக்கி, ஆளுமையாக வலம் வந்தவர்கள், உடல்நலக்குறைவால் எந்த வேலையும் செய்ய முடியாமல், முடங்கும் போது, தனிமையை உணருவார்கள். தன் இணையை இழந்து, பிறரின் ஆதரவை தேடும் போது, தனிமை வாட்ட தொடங்கும்.
கவுரவமான இறப்பைதான் முதுமைப்பருவம் தேடும். இறுதிநாட்கள் வரை, தன்னுடைய அடிப்படை கடமைகளை செய்து கொண்டவர்கள் கூட, இறக்கும் தருவாயில் சொந்தங்கள், உறவுகள், பிள்ளைகளை தேடுவர்.
அச்சமயத்தில் அனைவரும் உடனிருப்பதும், மரியாதையாக நடத்துவதும் அவசியம். எந்த சூழலிலும் அவர்களை கைவிடக்கூடாது. வீட்டிலிருந்து அவர்கள் வெளியேறினால் கூட, அவர்களை தேடி கண்டுபிடித்து, தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும்.
முதியோர் இல்லங்களை தேடி வரும் பலரும், விருப்பப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கான மரியாதை இல்லாத இடமாக, உணரும் நொடியில், வெளியேறி விடுகிறார்கள்.
தனிமையாக இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தாமல், எல்லாவற்றையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வது, தேவைகளை பூர்த்தி செய்வது, பொருளாதார சுதந்திரம் அமைத்து தருவது, கவுரவமாக அதே ஆளுமையுடன், மீதிக்காலத்தை கழிக்க வழி ஏற்படுத்தி தருவதும் தான், பெற்றோருக்கு திரும்ப பிள்ளைகள் செய்யும் கடமை. இதைத்தான் முதுமை எதிர்பார்க்கிறது.

