/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை புலிகள் காப்பகத்தினுள் என்ன நடக்குது!: உண்மை கண்டறியும் குழு அமைக்கணும்
/
ஆனைமலை புலிகள் காப்பகத்தினுள் என்ன நடக்குது!: உண்மை கண்டறியும் குழு அமைக்கணும்
ஆனைமலை புலிகள் காப்பகத்தினுள் என்ன நடக்குது!: உண்மை கண்டறியும் குழு அமைக்கணும்
ஆனைமலை புலிகள் காப்பகத்தினுள் என்ன நடக்குது!: உண்மை கண்டறியும் குழு அமைக்கணும்
ADDED : ஜன 24, 2026 04:53 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வனப்பகுதியில் பலவகை மரங்கள் வெட்டப்படுவதால், உணவுச்சங்கிலி பாதிக்கப்பட்டு, வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு படையெடுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் பழமை வாய்ந்த மற்றும் பல தரப்பட்ட மரங்கள் உள்ளன. அதில், சீமை கருவேல், யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி வழங்கியது.
இந்நிலையில், வனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு மரங்கள் வெட்டப்படுவதாகவும், குறிப்பிட்ட மரங்களுடன் வேறு வகை மரங்களும் வெட்டப்படுவதாக புகார் எழுந்தது.
அனுமதிக்கப்பட்ட மரங்களை விட, மற்ற காட்டு மரங்களையும் வெட்டி வீழ்த்துவதால், வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவுத்தேடலுக்காக விளைநிலங்களுக்கு படையெடுக்கின்றன.
நவமலை பகுதியிலும் மரங்கள் வெட்டப்படும் சூழலில், காட்டுப்பன்றி, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவு விளைநிலங்களுக்கு படையெடுப்பதால் விவசாயிகள் வேதனையின் உச்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வனவிலங்குகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையினை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து புகார்கள் எழுந்த போதும், வனத்துறையினர் அனுமதி அளித்த அளவு மட்டுமே மரங்கள் வெட்டப்படுவதாக தெரிவித்தனர். அதனால், உயர் அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியதாவது:
பொள்ளாச்சி வனச்சரகத்தில், நவமலை பகுதி யானை வழித்தடமாக உள்ளது. இங்கு டன் கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. முறையான அனுமதி பெற்று மரங்களை வெட்டுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனுமதி பெற்றாலும், யானை வழித்தடங்களில் திடீரென்று அதிகளவிலான மரங்களை வெட்டும் போது, உணவு சங்கிலி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. யானை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன உயிரினங்கள், வனத்தையொட்டியுள்ள விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிக்குள் புகுவதால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.மரங்களில் கூடு கட்டி வாழ்ந்த பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
போத்தமடை வனப்பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றுவதில், எந்த விதி முறையும் பின்பற்றப்படுவதில்லை. கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் சிறிய உயிரினங்கள் பாதிக்கும். சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பகுதியில், வேறு வகை மரங்கள் குறித்த விபரம் கணக்கிடப்படவில்லை. இதனால்,வேறு மரங்களும் வெட்டப்பட்டு இருக்கலாம்.
சேத்துமடை பகுதியில், 100 ெஹக்டேருக்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்குள் சீமை கருவேலம் மரங்கள் என்ற பெயரில் வனம் அழிக்கப்பட்டுள்ளது.எனவே, உண்மை கண்டறியும் குழு, பிற துறை அதிகாரிகளுடன் அமைக்க வேண்டும்.
சீமை கருவேல மரங்கள் அகற்றுவதற்கு முன் அப்பகுதியில் பிறவகை மரங்கள் கணக்கீடு செய்து அடையாளப்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

