/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு என்ன தொடர்பு?
/
ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு என்ன தொடர்பு?
ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு என்ன தொடர்பு?
ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு என்ன தொடர்பு?
ADDED : ஜூன் 17, 2025 11:40 PM
சென்னை:டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழில் அதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை, அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்ய. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, மே, 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்களில், 'அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்த, 'ஹார்ட் டிஸ்க்' உள்ளிட்ட பொருட்களை திருப்பி வழங்க வேண்டும்; அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்; அலுவலகம், வீடுகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் இருவரிடமும், எதன் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற விபரங்களை, சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார்.
எங்கிருந்து அதிகாரம்
அதை ஆய்வு செய்த நீதிபதிகள், 'எங்கள் முன் தாக்கல் செய்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை' என தெரிவித்து, 'இன்று முறைகேடில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.
மேலும் வீட்டை, 'சீல்' வைக்க, எங்கிருந்து அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்தது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ''வீடு சீல் வைக்கப்படவில்லை; தங்களை தொடர்பு கொள்ளாமல், வீட்டின் கதவை திறக்க வேண்டாம் என்று, நோட்டீஸ் மட்டும் தான் ஒட்டப்பட்டது' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்; தன் வீட்டுக்குள் செல்ல, மனுதாரர் அமலாக்கத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா' என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த நோட்டீசை அகற்றி விடுகிறோம்' என, அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், 'நீதிமன்றத்தை கேட்டு தான் நோட்டீஸ் ஒட்டப்பட்டதா; நோட்டீஸ் ஒட்ட அதிகாரம் இல்லாத நிலையில், சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை, சட்டப்பூர்வமானதாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்' என்று, தெரிவித்தனர்.
ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''டாஸ்மாக் முறைகேட்டில், பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராக, 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
''கடந்த 2014 முதல், 2021 வரையிலான காலகட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பதிவான வழக்கின் அடிப்படையில் தான், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில், ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி அல்லது கல்லுாரி சென்றிருக்கலாம்,'' என்றார்.
உத்தரவு
விக்ரம் ரவீந்திரன் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் கிரி, அபுடுகுமார் ஆஜராகி, 'இந்த முறைகேட்டில் சம்பந்தமே இல்லாத போது, வீடு, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது' என்றனர்.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன், தொழில் அதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை, அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.