ADDED : மே 30, 2026 03:58 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் பராமரிப்பில்லாத அரசு பஸ்களுக்கு மாற்றாக, புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில், மூன்று பணி மனைகளில் இருந்து அரசு டவுன் பஸ்கள், உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்களை நம்பியே கிராம மக்கள், அரசு அலுவலக பணிகளுக்கும், மருத்துவமனை, அன்றாட வேலைகளுக்கும் செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் அரசு பஸ் சேவையை நம்பியே உள்ளனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இயக்கப்படும் டவுன் பஸ்களால் பயணியர் பரிதவித்து வருகின்றனர். பெரும்பாலான பஸ்கள் வழித்தடத்தில் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. சில பஸ்களில் இருக்கைகள், ஜன்னல்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது.
நடுவழியில் பஸ்கள் அடிக்கடி, 'மக்கர்' ஆகி நின்றுவிடுவதும், 'ஸ்டார்ட்' ஆகாமல் பயணியர் ஒன்றிணைந்து பஸ்சை தள்ளி விட்டு இயக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது.
அதிலும், நடுவழியில் பழுதாகி நிற்கும் போது மாற்று பஸ் பெரும்பாலும் இயக்குவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மக்கள், தவிப்புக்கு உள்ளாகின்றனர். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை மாற்றி, புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
