/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் எந்த துறை, எங்கே? நோயாளிகள் அலையும் அவலம் வரைபடம் வைத்தால் குழப்பம் தீரும்
/
அரசு மருத்துவமனையில் எந்த துறை, எங்கே? நோயாளிகள் அலையும் அவலம் வரைபடம் வைத்தால் குழப்பம் தீரும்
அரசு மருத்துவமனையில் எந்த துறை, எங்கே? நோயாளிகள் அலையும் அவலம் வரைபடம் வைத்தால் குழப்பம் தீரும்
அரசு மருத்துவமனையில் எந்த துறை, எங்கே? நோயாளிகள் அலையும் அவலம் வரைபடம் வைத்தால் குழப்பம் தீரும்
ADDED : நவ 13, 2025 12:50 AM

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், நோயாளிகளுக்கு உதவ சரியான வழிகாட்டி வரைபடம், நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கவேண்டியது அவசியம்.
அரசு மருத்துவமனை சுமார் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு, புற்றுநோய், மனநலம், எலும்பு முறிவு, விபத்து அறுவைசிகிச்சை, உட்பட 31 துறைகள் செயல்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
துறைகள் மட்டுமின்றி, ரத்த பரிசோதனை, ஸ்கேன், எம்.ஆர்.ஐ., எக்ஸ்ரே என பல்வேறு இடங்களுக்கு நோயாளிகளும், உறவினர்களும் செல்லவேண்டிய சூழல் உள்ளது.
இதுபோன்ற சூழலில், எந்த துறை எங்கு உள்ளது, லேப் எங்குள்ளது, பரிசோதனை கூடங்கள் எங்குள்ளது என்பது அறியாமல், பலர் அலைக்கழிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.
உதவி மையங்கள் மூடல் மருத்துவமனையில் இரண்டு இடங்களில், உதவி மையங்கள் வைக்கப்பட்டு இருந்தாலும், பல நேரங்களில் உதவி மையங்கள் மூடப்பட்டுள்ளன.
சில இடங்கள் எங்கு உள்ளது என்று, உதவி மைய அலுவலர்களுக்கே தெரியாத சூழலும் உள்ளது. வழிகாட்டி வரைப்படம் வைக்கப்பட்டால், பொதுமக்கள் எளிதாக சென்று சிகிச்சை பெற இயலும்.
சிகிச்சை பெற வந்த சரவணன் கூறுகையில், ''அரசு மருத்துவமனை பெரிய இடத்தில் அமைந்துள்ளதால், எந்த துறை எங்கு உள்ளது என்பதை கண்டறிய முடிவதில்லை.
வழிகாட்டி வரைபடம் தெளிவாக வைத்தால், பார்த்து செல்வதற்கு எளிதாக இருக்கும். தவிர, பேட்டரி கார், தாய் சேய் வாகனம், புகார் தெரிவிக்கும் தொடர்பு எண் போன்ற அனைத்தும் தெளிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும், '' என்றார்.
'நடவடிக்கை எடுக்கப்படும்' அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியாவிடம் இது குறித்து கேட்டபோது, '' பொதுமக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் தான் உதவி மையங்கள் ஆங்காங்கே உள்ளன. இருப்பினும் இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.
15 ஆண்டுகளுக்கு முன், மருத்துவமனை நுழைவு வாயில் அருகே, இது போன்ற வரைபட பேனர் பெரியளவில் வைக்கப்பட்டிருந்தது. நோயாளிகளுக்கு உதவியாக இருந்தது. அதே போன்ற வரைபடத்தை இப்போது நிறுவலாம்.

