/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றி தொல்லை தீரல; விவசாயிகள் வேதனை
/
காட்டுப்பன்றி தொல்லை தீரல; விவசாயிகள் வேதனை
ADDED : மே 14, 2025 11:50 PM
சூலுார்; காட்டுப்பன்றிகளின் தொல்லை தொடர்வதால், மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில், இடையர்பாளையம், போகம் பட்டி, பொன்னாக்கானி சுற்றுவட்டார பகுதிகளில், பல ஏக்கரில் பீட்ரூட், தக்காளி, மிளகாய் மற்றும் மக்காச்சோள சாகுபடி நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்து சென்ற பின், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பல மாதங்காளக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் தொடர்கிறது. கூட்டம் கூட்டமாக வந்து, மக்காச்சோள பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. வனத்துறை ஊழியர்கள் வந்து பல பகுதிகளில் ஆய்வு செய்து, காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.
ஆனால், பல நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், காட்டுப்பன்றிகளின் தொல்லை தொடர்கிறது. இதனால், பயிர்கள் சேதமடைந்து, நாங்கள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம். உடனடியாக காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.