ADDED : ஏப் 26, 2026 07:24 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டிங் தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் ராஜீவ், 41, பெயிண்டிங் தொழிலாளி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த, பக்கத்து வீட்டைச்சேர்ந்த, 13 வயது சிறுமியை பார்த்து பேச்சுக் கொடுத்துள்ளார்.
மேலும், தன்னிடமிருந்து சாக்லேட்டை சிறுமிக்கு கொடுத்தார். ஆனால் அந்த சிறுமி சாக்லேட் வாங்க மறுப்பு தெரிவித்தை தொடர்ந்து, வலுக்கட்டாயமாக சாக்லேட்டை கொடுத்ததுடன், அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதை சுதாரித்துக் கொண்ட அந்த சிறுமி, அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ராஜீவை போலீசார் கைது செய்தனர்.
