தென்னை தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பு படிக்கலாம்!
தென்னை தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பு படிக்கலாம்!
ADDED : செப் 04, 2025 10:46 PM
- நமது நிருபர் -
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொலைதுாரக் கல்வி வாயிலாக, தென்னை தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் பல்கலை திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககத்தில், 44 வகையான ஆறு மாத சான்றிதழ் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற சான்றிதழ் பாடம், தென்னை உற்பத்தி தொழில்நுட்பங்கள் ஆகிய பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பல்வேறு ரகங்களைத் தேர்வு செய்வது, துல்லிய ஊட்டச்சத்து மேலாண்மை, நவீன நீர்பாசன உத்திகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, இடைவெளி, உரமிடல், தென்னையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவற்றை, இப்படிப்புகள் உள்ளடக்கியுள்ளன.
சான்றிதழ் படிப்புக்கு, 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் வழியில், சனிக்கிழமைதோறும் 5 மாதங்கள் பயிற்சி வகுப்பு நடக்கும். வயது வரம்பு இல்லை. பயிற்சிக் கட்டணம் ரூ.2,500. 6வது மாதம் தேர்வு நடக்கும்.
டிப்ளமோ படிப்புக்கும் இதே தகுதி. மாதம் ஒரு சனி, ஞாயிறு பயிற்சி வகுப்பு ஓராண்டுக்கு நடக்கும். இரு பருவங்களாக தேர்வு நடக்கும். ரூ.20 ஆயிரம் கட்டணம். விவரங்களுக்கு 94421 11048, 94890 51046 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
