/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் வரையில் சென்னை பயணிகள் ரயில்... நீட்டிக்கப்படுமா; கடலுார் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
/
விருத்தாசலம் வரையில் சென்னை பயணிகள் ரயில்... நீட்டிக்கப்படுமா; கடலுார் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
விருத்தாசலம் வரையில் சென்னை பயணிகள் ரயில்... நீட்டிக்கப்படுமா; கடலுார் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
விருத்தாசலம் வரையில் சென்னை பயணிகள் ரயில்... நீட்டிக்கப்படுமா; கடலுார் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 07:33 AM
திருச்சி - சென்னை ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், சரக்கு ரயில்கள் என தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. அதுபோல், சேலம் - கடலுார் மார்க்கமாக செல்லும் ரயில்களும், விருத்தாசலம் ரயில் நிலையம் வந்து, இன்ஜின் மாற்றம் செய்து புறப்படுகிறது.
இங்கிருந்து கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கல்வி, மருத்துவம், வணிகம் என, நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர்.
ஆனால், தலைநகரான சென்னைக்கு, விருத்தாசலத்தில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லாமல், திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்களில் முண்டியடித்தபடி செல்லும் அவலம் நீடிக்கிறது.
பொதுவாக முன்பதிவு செய்யாமல், தினசரி ரயில் பாஸ் பெற்று செல்லும் பயணிகள் ரயிலின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் உள்ள பொதுப்பயண பெட்டிகளில் நிற்க கூட முடியாத நிலையில், சென்னைக்கு மூன்று மணி நேரம் பயணிக்கும் அவலம் தொடர்கிறது.
இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:20 மணிக்கு புறப்படும், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட செய்யலாம்.
அதன்படி, அதிகாலை 4:30 மணிக்கு, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் புறப்பட்டாலும், காலை 8:30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடைய முடியும் என, ரயில் பயணிகள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரயில் பயணிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் கூறுகையில், சென்னை ரயிலை விருத்தாசலம் வரையில் நீட்டித்தால், சென்னைக்கு கல்வி, மருத்துவம், வணிகம் மற்றும் அரசு, தனியார் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் சென்றடைய முடியும். தற்போது, கோயம்போடு பஸ் நிலையத்துக்கு மாற்றாக, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கப்பட்டதால், பஸ்சில் செல்வோர் மிகுந்த சிரமமடைகின்றனர்.
மாறாக, ரயிலில் செல்வதால், தாம்பரம் சென்று, அங்கிருந்து 5 நிமிடத்திற்கு ஒருமுறை வரும் புறநகர் ரயிலில் எளிதில் சென்றடையலாம்.
இதனால் கல்வி, தொழில் ரீதியாக செல்வோர் தினசரி வந்து செல்ல ஏதுவாக அமையும். மேலும், பஸ்சில் கூடுதல் கட்டணத்தில், பல மணி நேரம் பயணம் செய்வது தவிர்க்கப்படும்.
தினசரி வந்து செல்வதால், சென்னை மாநகரில் ஏற்படும் இட நெருக்கடிக்கு எளிதில் தீர்வு காண முடியும.
மேலும், கடலுாரில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம், ஈரோடு மார்க்கமாக கோவைக்கு ரயில் விட வேண்டும். இதனால், சேலம், ஈரோடு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு கடலுார் மாவட்டத்தில் இருந்து எளிதில் சென்று வருவதுடன், வணிக ரீதியாகவும் பயனடைய முடியும்.
எனவே, விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும் வகையில், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிப்பு செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, விருத்தாசலம் நகர வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத்திடம் கோரிக்கை மனுவும் தரப்பட்டுள்ளது.