/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
/
கடலுாரில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
ADDED : செப் 05, 2024 04:15 AM
கடலுார் : கடலுார் சுப்ராயலு ரெட்டியார் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்துள்ளதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேணடும்.
கடலுார் மாநகராட்சியில் பொதுமக்கள் குழந்தைகளுடன் பொழுது போக்கவும், பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வாக அமர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், கடலுார் நகரின் மைய பகுதியில் பாரதி சாலையில் விஸ்தாரமான பரப்பளவில் சுப்ராயலு ரெட்டியார் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு நடை பாதை, சிறுவர்கள் விளையாட விதவிதமான விளையாட்டு சாதனங்கள், நீர் வீழ்ச்சி, பிரகாசமூட்டும் விளக்குகள் என, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இப்பூங்கா உள்ளது.
பராமரிப்புக்கென நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், முறையாக பராமரிக்கப்படாமல், பூங்கா முழுமையாக சேதமாகியுள்ளது. நடைபாதை சிலாப்புகள் உடைந்து சேதமாகியுள்ளது. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அத்தனையும் வீணாகி ஒப்புக்கென உள்ளது.
இதனால் பொதுமக்கள் வருகை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், காதலர்கள் பூங்காவாக மாறியுள்ளது. காலை முதல் மாலை வரையில் காதலர்கள் பூங்காவை ஆக்கிரமித்து கொள்கின்றனர். இவர்கள், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில், நடந்து கொள்கின்றனர்.
எனவே, கடலுார் மாநகராட்சியில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்துவரும் சுப்ராயலு ரெட்டியார் பூங்காவை பராமரித்து, மீண்டும் புதுப்பொலிவு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.