/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தை ஏக்கத்தில் தம்பதி தற்கொலை
/
குழந்தை ஏக்கத்தில் தம்பதி தற்கொலை
ADDED : மே 29, 2024 05:08 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (எ) குமரவேல்,32; டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 ஆண்டிற்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டார். அதையடுத்து, இரண்டாவதாக அதே ஊரை சேர்ந்த குருசாமி மகள் மீனா, 20; என்பவரை, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லை.
குமரவேல்- மீனா தம்பதி வீட்டு மாடியிலும், குமரவேல் பெற்றோர் தரை தளத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்க சென்ற குமரவேல், மீனா நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த குமரவேல் தாய் பொற்கொடி, காலை 8:00 மணிக்கு மாடிக்கு சென்று கதவை தட்டினர். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.