/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் தாக்கு பஸ்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
/
விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் தாக்கு பஸ்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் தாக்கு பஸ்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் தாக்கு பஸ்களை சாலையில் நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
ADDED : ஏப் 25, 2024 11:34 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், அரசு பஸ்சை நிறுத்தி, கண்டக்டரை சரமாரியாக தாக்கிய வாலிபரை கைது செய்யக்கோரி, அரசு பஸ்களை சாலையில் நிறுத்தி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து கடலுாருக்கு (தடம் எண் 219) அரசு பஸ் நேற்று மாலை 3:00 மணிக்கு புறப்பட்டது. சேத்தியாதோப்பு அடுத்த கத்தாழை பரசுராமன் மகன் வசந்தகுமார், 32, பஸ்சை ஓட்டினார். விருத்தாசலம் அடுத்த முடப்புளி தமிழ்ச்செல்வன் மகன் அருள்ராஜ், 25, கண்டக்டராக பணியில் இருந்தார். இருவரும் தற்காலிக பணியாளர்கள்.
பஸ், கடலுார் சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே சென்றபோது, வாலிபர் ஒருவர் சாலையின் குறுக்கே பஸ்சை வழிமறித்து நின்றார். ஒதுங்கி நிற்குமாறு கூறியதால் ஆத்திரமடைந்த அவர், கண்டக்டர் அருள்ராஜை சரமாரியாக தாக்கினார்.
இதில் காயமடைந்த அருள்ராஜ் பஸ்சின் முன் அமர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
இதனால், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், தாசில்தார் உதயகுமார், இன்ஸ்பெக்டர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர்.
அப்போது, கண்டக்டரிடம் புகார் பெற்று, தாக்குதல் நடத்திய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையேற்று, பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, மாலை 4:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
விசாரணையில், தகராறில் ஈடுபட்ட வாலிபர், விருத்தாசலம் கஸ்பா காலனியை சேர்ந்த சசிகுமார் மகன் தனுஷ், 25, என தெரியவந்தது. உடன் அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்க முன் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கஞ்சா போதையில் அரசு பஸ் டிரைவரை இளைஞர்கள் சிலர் தாக்கும் வீடியோ வைரலானது. இந்நிலையில், விருத்தாசலத்தில் அதேபோல சம்பவம் நடந்ததால் கண்டக்டர்கள், டிரைவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

