சிதம்பரம் : சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டய படிப்பு பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்துடன் செய்து கொண்ட கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியர்களுக்கு சுரங்கவியல் பட்டய படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 2023-24ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் 60 பேர் மற்றும் கடந்த ஆண்டு பயின்ற மாணவர்கள் 32 பேர் உட்பட 92 மாணவர்களுக்கு வேலை வாய்பிற்கான நேர்காணல் நேற்று, பொறியியல் துறை வளாகத்தில் நடந்தது. நேர்காணலுக்கு பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்புத்துறை இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். என்.எல்.சி., வேலை வாய்ப்பு துறை அதிகாரிகள் நேர்காணலை நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர்.

