வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி! மாவட்டத்தில் விவசாயிகள் கவலை
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி! மாவட்டத்தில் விவசாயிகள் கவலை
UPDATED : ஜூலை 19, 2026 09:24 PM
ADDED : ஜூலை 19, 2026 09:11 PM

கடலுார்: கடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வாழைத்தார்களின் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அடுத்த குள்ளஞ்சாவடி, புலியூர் காட்டுசாகை, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், எஸ்.புதுார், வெள்ளக்கரை, ஒதியடிக்குப்பம், சாத்தங்குப்பம், கீரப்பாளையம், வி.காட்டுப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள, 15 கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதன்படி, இக்கிராமங்களில் 20,000 ஏக்கரில் பூவன் தார், ரஸ்தாளி, ஏலக்கி, செவ்வாழை ரக வாழைத்தார்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, வாழை மரங்கள் நன்கு வளர்ந்து குலை தள்ளிய நிலையில் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், வாழைத்தார்களுக்கு போதிய விலையின்றி வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 400 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்பனையான பூவன் தார் தற்போது, 200 முதல், 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோன்று, 400 ரூபாய்க்கு விற்பனையான ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய்க்கும், ஒரு கிலோ, 55 ரூபாய்க்கு விற்பனையான செவ்வாழை, 35 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஒரு ஏக்கருக்கு வாழை சாகுபடி செய்ய, 2 லட்சம் ரூபாய் செலவு ஆகும். தற்போது, மாவட்டத்தில் வாழைத்தார்கள் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் ஏராளமான வாழை தார்கள் மரத்திலேயே பழுத்து வீணாகியுள்ளன.
அதிக விளைச்சல் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூவன் தார், ரஸ்தாளி, செவ்வாழை போன்ற வாழைத்தார்களின் தேவை குறைந்து விட்டது. இதனால், விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விவசாயிகள் கூறுகையில்,'தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட வாழை சாகுபடியை பார்வையிட்டு கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து தோட்டகலைத்துறை ஒருவர் அதிகாரி கூறுகையில், 'விவசாயிகளின் இப்பிரச்னை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
