/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துப்புரவாளரிடம் லஞ்சம் நகராட்சி உதவியாளர் கைது
/
துப்புரவாளரிடம் லஞ்சம் நகராட்சி உதவியாளர் கைது
ADDED : ஜூலை 04, 2024 02:14 AM

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த திருவதிகையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 42. பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில், 2013ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணிபுரிகிறார். இவர், பத்தாண்டு காலம் பணி நிறைவு செய்ததால், தேர்வுநிலை பணியாளராக நியமனம் செய்து, ஊதிய உயர்வு அளிக்கும்படி நகராட்சியில் மனு அளித்தார்.
அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து, ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி, நகராட்சி அலுவலக சுகாதாரப் பிரிவில் உதவியாளராக பணிபுரியும் கதிரவன், 55, என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். கடலுார் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், நேற்று காலை 11:00 மணிக்கு கதிரவனை கையும், களவுமாக கைது செய்தனர்.