/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வரை வரவேற்று திரும்பியபோது விபத்து வேன் கவிழ்ந்து ஒருவர் பலி ; 35 பேர் காயம்
/
முதல்வரை வரவேற்று திரும்பியபோது விபத்து வேன் கவிழ்ந்து ஒருவர் பலி ; 35 பேர் காயம்
முதல்வரை வரவேற்று திரும்பியபோது விபத்து வேன் கவிழ்ந்து ஒருவர் பலி ; 35 பேர் காயம்
முதல்வரை வரவேற்று திரும்பியபோது விபத்து வேன் கவிழ்ந்து ஒருவர் பலி ; 35 பேர் காயம்
ADDED : பிப் 22, 2025 09:28 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று திரும்பியபோது வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் இறந்தார்; 35 பேர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த திருப்பயரில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்றார்.
முதல்வரை வரவேற்கும் வகையில், விருத்தாசலத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்து கொள்ள மங்கலம்பேட்டை அடுத்த பழையபட்டிணம் கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், டாடா ஏஸ் வேனில் விருத்தாசலம் வந்தனர். பகல் 12:00 மணிக்கு மேல், விருத்தாசலத்தில் இருந்து கச்சிராயநத்தம் - இருசாளகுப்பம் சாலையில் வந்தபோது, பாரம் தாங்காமல், வேன், சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.
இதில், டிரைவர் உட்பட 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், அனைவரும் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மற்றும் டாடா ஏஸ் வேன், அரசு பஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த குப்புசாமி, 55, மலைராஜன் மனைவி வேம்பரசி, 32, உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குப்புசாமி உயிரிழந்தார். விபத்து குறித்து விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.