ADDED : மார் 13, 2025 12:19 AM

சேத்தியாத்தோப்பு, : தாசில்தார் தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தையில், சின்னநற்குணம் கிராம மக்கள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநற்குணம் கிராம மக்கள் பஸ் வசதிக்கேட்டு, சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை, புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் தனபதி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், ஆர்.ஐ., ஆனந்தி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
அதில், பஸ்கள் இடையூறு இல்லாமல் சென்று வர எறும்பூர் தெற்கு தெரு சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.
சிதம்பரம் அரசு பணிமனையிலிருந்து தினந்தோறும் காலை முதல் இரவு வரை பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு தாசில்தார் தனபதி கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்னே சிதம்பரம் பணிமனை மேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கை மனுவை அனுப்பி விரைந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனால், சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
