ADDED : ஜூன் 27, 2024 03:17 AM

பெண்ணாடம்: வடகரையில் பாழாகி வரும் கால்நடைகளின் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த வடகரையில் அதிகளவில் ஆடு, மாடுகளை விவசாயிகள் வளர்க்கின்றனர்.
கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, கடந்த 2019ல் அருகேரி செல்லும் சாலையோரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
ஆனால் இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.
இதனால், கால்நடைகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாததுடன், குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் முட்செடிகள் மண்டி, பாழாகிறது.
பாழாகி வரும் குடிநீர் தொட்டியை சீரமைத்து, கால்நடைகளுக்கு குடிநீர் வழங்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.