/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இட நெருக்கடி பிரச்னை: மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு
/
இட நெருக்கடி பிரச்னை: மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு
ADDED : ஜூலை 02, 2024 05:47 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வகுப்பறையில் இட நெருக்கடி குறித்து டி.இ.ஓ., நேரில் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் தென்கோட்டைவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பிசியோதெரபி உடற்பயிற்சி மற்றும் தினசரி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு வரை 40 மாணவர்கள் படித்தனர். தற்போது, 30 மாற்றுத்திறன் மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்களுக்கு ஒரு அறையில் உடற்பயிற்சியும், மற்றொரு அறையில் அன்றாட வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் ஒரு அறை மூடப்பட்ட நிலையில், மற்றொரு அறையில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை குவித்து வைத்து விட்டனர்.
இடநெருக்கடியில் மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயிலும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 லட்சம் ரூபாயில் உபகரணங்கள் இருந்தும் அவற்றை பயன்படுத்த இடவசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, டி.இ.ஓ, (துவக்கப் பள்ளிகள்) சேகர், நகராட்சிப் பள்ளியில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மாற்றுத்திறன் மாணவர்கள் நலன் கருதி, ஏற்கனவே இருந்த அறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயில உறுதுணையாக இருக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
முன்னதாக, மாற்றுத்திறன் மாணவர்களிடம், அவர்களின் பெயர், விபரம் குறித்து டி.இ.ஓ., சேகர் கேட்டறிந்தார். வட்டார கல்வி அலுவலர் விமலா, தலைமை ஆசிரியர் கமலாதேவி உட்பட ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உடனிருந்தனர்.