ADDED : ஜூலை 10, 2026 07:20 PM

கடலுார்: ரயில்வே கேட்டில் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்கும் வகையில் போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ரயில் நிலையம் வழியாக தினமும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் என, 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கம்மியம்பேட்டையை ரயில் கடந்து செல்லும் போது, கேட் மூடுவது வழக்கம். அப்போது, சாலையில் இருபக்கமும் நிற்கும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை எதிரில் வரும் வாகனங்கள் கூட செல்ல வழி விடாமல் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி விடுகின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, அவசர வேலையாக செல்வோர் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில், ரயில்வே கேட்டை ரயில்கள் கடந்து செல்லும் நேரத்தில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், போக்குவரத்தை ஒழங்குப்படுத்தும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
