/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மந்தம்
/
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மந்தம்
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மந்தம்
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மந்தம்
ADDED : ஏப் 26, 2024 12:12 AM

விருத்தாசலம், ஏப். 26- குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள்மந்தமாக நடைபெற்று வருவதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தா, வெள்ளாறு, கொள்ளிடம், பரவனாறு போன்ற ஆறுகளும், வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா ஏரிகளும் உள்ளன. சுற்றியுள்ள 10 மாவட்டங்களுக்கு வடிகாலாக இருந்த நிலையில், ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக அள்ளியது, மழைநீரை சேமிக்காதது, நீர்நிலைகள் துார்வாராதது போன்ற காரணங்களால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.
ஆழ்குழாய் மோட்டார்கள் உள்வாங்கி, செயலிழந்து வருவதால் 300 முதல் 450 அடி ஆழத்திற்கு புதிதாக போர்வெல் போடும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
ஆறுகளில் நீர்வரத்து இல்லாமல் போர்வெல் செயலிழந்து வரும் நிலையில், ஆண்டுதோறும் பேரிடரை சந்திக்கும் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகள் முடியாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர்க்கும் வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரைக் கொண்டு திட்டக்குடி, வடலுார் நகராட்சிகள், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சி கள் மற்றும் விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களைச் சேர்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பணி துவங்கியது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நான்கு பகுதிகளாக பிரித்து, நபார்டு வங்கி மற்றும் குறைந்தபட்ச சேவை திட்டம் (எம்.என்.பி.,) நிதியுதவியுடன் தீவிரமாக நடந்தது.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 7 லட்சத்து 91 ஆயிரத்து 662 லிட்டர் (39.43 மில்லியன் லிட்டர்) என 20 லட்சம் பேருக்கு தினசரி தேவையான குடிநீர் வழங்கப்படும்.
என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரநீரை 400 மி.மீ., விட்டமுள்ள இரும்பு குழாய்கள் மூலம் 8.20 கி.மீ., தொலைவிற்கு கீழ்வளையமாதேவி கிராமத்தில் 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்தி கரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட உள்ளது.
அங்கு 22.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, வெவ்வேறு குதிரைத்திறன் கொண்ட மின் இறைப்பான்கள் மூலம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை, பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை, திட்டக்குடி அடுத்த கொட்டாரம், ராமநத்தம் அடுத்த ஆவட்டி ஆகிய நான்கு பூஸ்டர் நீர் சேகரிப்பு தொட்டிகள், பொது நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் ஊராட்சி அளவிலான நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும்.
இங்கிருந்து ஏற்கனவே, பயன்பாட்டில் உள்ள 789 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப் பட்டு, மக்கள் பயன்பாட் டிற்கு வர உள்ளது.
திட்டக்குடி, வடலுார் நகராட்சிகள், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 50 லிட்டரும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 85 லிட்டரை கணக்கிட்டு, கூடுதலாக 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
அதே போன்று, விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களைச் சேர்ந்த 625 கிராம குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 35 லிட்டரும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 20 லிட்டரையும் கணக்கிட்டு, கூடுதலாக 55 லிட்டர் என்ற முறையில் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது வரை பணிகள் முழுமை பெறவில்லை.
ஆங்காங்கே ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி முழுமை பெறாமல், காட்சிப் பொருளாக சிமென்ட் குழாய்கள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோடைகாலம் துவங்கிய நிலையில், பொது மக்கள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் அலையும் அவலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

