பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் பணிகள் நிறுத்தம்:உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிப்பு
பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் பணிகள் நிறுத்தம்:உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிப்பு
UPDATED : ஜூலை 23, 2026 06:04 PM
ADDED : ஜூலை 23, 2026 05:52 PM
கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், ரூ. 14.7 கோடி மதிப்பில், நடந்து வரும் மேம்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதால், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், 3 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், சர்வதேச அளவில் இந்த சுற்றுலா மையம் பிரசித்தி பெற்றது.
இதனால், இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து, செல்கின்றனர். பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறன்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக, ரூ. 14.7 கோடி மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணி இங்கு, நடந்து வந்தது.
குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம், பார்வை கோபுரம், நடைபாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள் நிழற்குடை, டிக்கெட் கவுண்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த பணிகள் துரிதமாக நடந்தது. பிச்சாவரம் சுற்றுலா வளாக ஒரு பகுதியில் தற்போது, கார் பார்க்கிங் வசதி பணி முடிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தற்போது இந்த மேம்பாடடு பணிகள் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு, வருகின்றனர். எனவே, மேம்படுத்தும் பணியை, விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
