/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளிகளில் பராமரிப்பின்றி மைதானங்கள்
/
அரசு பள்ளிகளில் பராமரிப்பின்றி மைதானங்கள்
ADDED : ஆக 08, 2024 12:26 AM

விருத்தாசலம் : அரசு பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி இயக்குனர் உதவியுடன், உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் விளையாட்டுப் பயிற்சிகள் தரப்படுகிறது.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் மட்டுமல்லாது கைப்பந்து, எறிபந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகிறது.
இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலும், அங்கிருந்து மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்பர். தொடர்ந்து, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசு, பதக்கம்; உயர்கல்வியில் சிறப்பிடமும் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, கல்லுாரி அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோர், அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெறுவார்கள்.
தனியார் பள்ளிகளில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, குதிரை ஏற்றம், செஸ், நீச்சல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு தனித்தனி கட்டணம் செலுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
இதற்கென தனித்தனியாக பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், விளையாட்டு மைதானங்களும் வாரந்தோறும் பராமரிக்கப்படுகிறது.
ஆனால், அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் பராமரிக்கப்படுவது இல்லை. முட்புதர்கள் மண்டியும், ஓடு பாதைகளில் கற்கள் நிறைந்தும் இருப்பதால் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இவற்றில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு குதிகால் வலி போன்ற பல்வேறு உபாதைகளை சந்திக்கின்றனர்.
இதுபோன்ற இடர்பாடுகளை சந்திக்கும் மாணவர்கள் போட்டிகளில் சாதிக்க முடியாமல் கோட்டை விடும் அவலம் ஏற்படுகிறது.
எனவே, அரசு பள்ளி மாணவர்கள் போட்டிகளில் திறமையை நிரூபிக்க அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மேலும், பழுதான விளையாட்டு உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகளை புதுப்பித்துத் தர வேண்டும்.
இது குறித்து மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அரசு பள்ளிகளின் மைதானங்களை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.