/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எங்கே பண்ருட்டி அரசு கலைக்கல்லுாரி அமைவது... 5 ஏக்கர் இடம் கிடைக்காமல் தவிக்கும் அதிகாரிகள்
/
எங்கே பண்ருட்டி அரசு கலைக்கல்லுாரி அமைவது... 5 ஏக்கர் இடம் கிடைக்காமல் தவிக்கும் அதிகாரிகள்
எங்கே பண்ருட்டி அரசு கலைக்கல்லுாரி அமைவது... 5 ஏக்கர் இடம் கிடைக்காமல் தவிக்கும் அதிகாரிகள்
எங்கே பண்ருட்டி அரசு கலைக்கல்லுாரி அமைவது... 5 ஏக்கர் இடம் கிடைக்காமல் தவிக்கும் அதிகாரிகள்
ADDED : மார் 14, 2025 01:05 AM
பண்ருட்டி:தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பண்ருட்டி தொகுதியில் அமைக்க 5 ஏக்கர் நிலம் இல்லாததால் நெய்வேலி தொகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த மாதம் 21ம் தேதி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதில், பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், பண்ருட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., வேல்முருகன் வைத்திருந்தார். அதை ஏற்று, பண்ருட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க 5 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேவைப்படும். இதற்காக வருவாய்த்துறை சார்பில் கடந்த 15 நாட்களாக பண்ருட்டி தாலுகாவில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆனால் 5 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலம் பண்ருட்டி தொகுதியில் இல்லை. பண்ருட்டி திருவதிகையில் பாலுார் செல்லும் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை நிலம் அரசுக்கு கொடுத்திடும் வாய்ப்பு குறைவு.
நெய்வேலி தொகுதியில் பனிக்கன்குப்பம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே அரசு அண்ணா பொறியியல் கல்லுாரிக்கு போக மீதமுள்ள நிலம் சென்னை குடிநீர் வழங்கல் துறையிடம் உள்ளது. பனிக்கன்குப்பம் ஊராட்சியில் பீங்கான் தயாரிக்க பயன்படுத்த களிமண் எடுக்கப்படும் நிலம் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி பண்ருட்டி தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க 5 ஏக்கர் நிலம் இல்லை.
இதனால் தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தினால் தான் பண்ருட்டி தொகுதியில் கலை அறிவியல் கல்லுாரி, வரும் கல்வியாண்டில் ஏற்படுத்தப்படும் நிலை உள்ளது. இல்லையெனில் பண்ருட்டி நகரையொட்டி 2 கி.மீ., துாரத்தில் உள்ள நெய்வேலி தொகுதியான பனிக்கன்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் கல்லுாரி அமைக்க வாய்ப்புள்ளது.
தமிழக முதல்வர் அறிவிப்பின்படி பண்ருட்டி தொகுதியில் கலைக்கல்லுாரி ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி தொகுதியில் நெய்வேலி டவுன்ஷிப்பில் ஜவகர் இருபாலர் கல்லுாரி, காடாம்புலியூரில் சங்கமம் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பனிக்கன்குப்பத்தில் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியும் உள்ளது.
பண்ருட்டி தொகுதியில் தனியார் மகளிர் கல்லுாரி உள்ளது. ஆனால் இருபாலர் கல்லுாரி இல்லாததால் பண்ருட்டி மாணவர்கள் கடலுார், விழுப்புரம் அரசு கல்லுாரி நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொகுதி மக்களின் விருப்பபடி பண்ருட்டியில் கலைக்கல்லுாரி அமைக்க மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.