sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு

/

வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு

வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு

வேப்பூர் மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? மணல் தட்டுப்பாட்டால் பணிகள் தொய்வு


ADDED : செப் 18, 2024 06:28 AM

Google News

ADDED : செப் 18, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதுகுடியில் இருந்து, திருமாந்துறை டோல்பிளாசா வரையிலான பகுதியில் அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் நடக்கிறது.

குறிப்பாக, வேப்பூர் பஸ் நிலையம் எதிரே, மாதத்திற்கு சராசரியாக 20 விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் 'தினமலர்' நாளிதழில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, 'நகாய்' சார்பில் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) சார்பில், வேப்பூர் பஸ் நிலையம் எதிரே மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.8.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, 2019ல், மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்கியது. 15 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என 'நகாய்' அதிகாரிகள் கூறினர்.

கட்டுமானப் பணிகளை பெங்களூருவை சேர்ந்த ஏ.இ.சி., புரோமேக் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டது.

மேலும், மேம்பால கட்டுமான பணிக்காக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், வேப்பூர் சர்வீஸ் சாலையில் செல்லும்விதமாக போக்குவரத்து மாற்றப்பட்டது.

மேம்பால பக்கவாட்டு சுவர் அமைத்த பின், கொரோனா தொற்று பரவல், மணல் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இரண்டு ஆண்டுகள் கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடக்காத நிலையில், கடந்த 2021ல் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி மண்டல திட்ட இயக்குனர் நரசிங்கம், ஒப்பந்ததாரர்களுடன் பேசி விரைவில் பணிகள் துவக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, மேம்பாலம் கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கியது.

இந்நிலையில், பாலத்தின் உயரம் 4 மீட்டர் என்ற அளவில் அமைக்கப்பட்டது. இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் கதிர்வேல் கோரிக்கை மனு அனுப்பினார்.

மனுவில், '1.25 கி.மீ., துாரத்தில் வேப்பூர் கூட்ரோடு மேம்பாலம், சிறுநெசலுார் மேம்பாலம் அமைந்துள்ளது. இதற்கிடையே, வேப்பூர் பஸ் நிலையம் எதிரேயுள்ள மேம்பாலம் உயரம் குறைவாக கட்டப்பட்டால் விபத்துகள் ஏற்படும். வாகனங்கள் பஸ் நிலையம் செல்ல முடியாது. எனவே, 5 மீட்டர் உயரம் மேம்பாலம் அமைக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கு, சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்த பின், மேம்பாலம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும், மேம்பால கட்டுமான பணிகள் தொடர்ந்ததால், சமூக ஆர்வலர் கதிர்வேல், கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வேப்பூர் கூட்டு ரோடு பாலம், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரிலுள்ள பாலம் இரண்டையும் இணைத்து சமதளமாக அமையும் வகையில் பாலம் அமைக்கப்படும் எனக் கூறிய அதிகாரிகள், அதுபோல அமைக்காமல் பஸ் நிலையம் எதிரே தனியாக ஒரு பாலம் அமைப்பதால் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு, 'நகாய்' தரப்பில், போக்குவரத்து துறை, ஆர்.டி.ஓ., மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்து, அவ்ரகளது அறிக்கையை பெற்று பாலம் பணிகள் நடக்கிறது என தெரிவித்தனர். இதையேற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 2024 மே மாதம் நின்று போன கட்டுமானப் பணிகள் தற்போது மீண்டும் துவங்கி நடக்கிறது.

இருந்தபோதும், மணல் தட்டுப்பாடு காரணமாக, மேம்பால பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் அதிக விபத்துகள் நடப்பதை கருத்தில் கொண்டு, பணிகளை விரைவுபடுத்தி மேம்பாலத்தை கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக ஆர்வலர் கதிர்வேல் கூறுகையில், 'சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கிராமத்திற்கு நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியாக வேப்பூர் உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல், நெடுஞ்சாலைக்கு அருகிலேயே பஸ் நிலையம் இருந்த நிலையில், பொதுமக்கள், பஸ்கள் செல்வதற்கு முறையாக வழியை நிறுவாமல் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் செய்த தவறால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போதும் பஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்படும் பாலத்தால் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்புகளே உள்ளது. வேப்பூர் கூட்டுரோடு பாலத்திலிருந்து, அரசு மேல்நிலைப் பள்ளி எதிரிலுள்ள பாலம் வரை சமதளமாக அமையும் வகையில் பாலம் அமைக்க வேண்டும்' என, தெரிவித்தார்.

பணிகள் முடிக்கப்படும்'

'நகாய்' திருச்சி மண்டல திட்ட இயக்குனர் பிரவின்குமார் கூறுகையில், 'வேப்பூர் மேம்பால பணிகள் இன்னும் 45 நாட்களில் முடிக்கப்படும். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மேலும், பொதுமக்கள் தேவைக்கேற்ப அபிவிருத்தி பணிகளும் செய்யப்படும்' என தெரிவித்தார்.



விபத்தை தடுக்கும் வழிகள்

* வேப்பூர் பஸ் நிலையம் எதிரே கட்டப்படும் பாலத்தின் உயரத்தை 5 மீட்டர் அளவிற்கு உயர்த்துவது.* இருபுறமும் சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி, இருவழிச் சாலையாக மாற்றுவது.* போக்குவரத்து போலீசாரை நியமித்து, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவது..



மவுனம் காக்கும் மக்கள் பிரதிநிதிகள்

வேப்பூர் மேம்பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஆனால், நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் யாரும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.தென் தமிழகத்தை சென்னையுடன் இணைக்கும் பிரதான சாலையில், நான்கு ஆண்டுகளாக பாலம் கட்டி முடிக்கப்படாமல் குறுகலான சர்வீஸ் ரோடு வழியாக லட்சக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கின்றன.இவ்வழியே அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அரசியல் கட்சியினர் பயணித்த போதிலும், வேப்பூர் மேம்பால பிரச்னையை கண்டும் காணாமல் இருப்பது மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது



பாலம் பகுதியில் 25 பேர் பலி

மேம்பாலம் கட்டுமானப் பணி காரணமாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2021ம் ஆண்டு 7 விபத்துகளில் 7 பேரும், 2022ல் 6 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 2023ம் ஆண்டில் நடந்த 7 விபத்துகளில் 11 பேரும், 2024ம் ஆண்டில் ஒரு விபத்தில் ஒருவர் இறந்துள்ளனர்.



விபத்துகளுக்கான காரணங்கள்

*வேப்பூர் மேம்பாலம் அருகே சர்வீஸ்சாலையில் விதிகளை மீறி வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது.*சர்வீஸ் ரோடு அகலப்படுத்தப்படாமல் குறுகலாக இருப்பது. *நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது. *ஒருவழிப் பாதையில் இரு புறமும் வாகனங்கள் வருவது.*அதி வேகமாக செல்லும் வாகனங்களின் குறுக்கே சாலையைக் கடப்பது.



4 ஆண்டில் 490 விபத்துகள்

* வேப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் 2021ம் ஆண்டு நடந்த 151 விபத்துகளில் 23ல் சம்பவ இடத்திலும், 15ல் சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. * 2022ம் ஆண்டில் நடந்த 129 விபத்துகளில் 26ல் சம்பவ இடத்திலும், 8ல் சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. * 2023ம் ஆண்டில் நடந்த 124 விபத்துகளில் 35ல் சம்பவ இடத்திலும், 14ல் சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. * 2042ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த 86 விபத்துகளில் 10ல் சம்பவ இடத்திலும், 4ல் சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us