/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 பெண்களிடம் செயின் பறிப்பு பண்ருட்டியில் துணிகரம்
/
3 பெண்களிடம் செயின் பறிப்பு பண்ருட்டியில் துணிகரம்
3 பெண்களிடம் செயின் பறிப்பு பண்ருட்டியில் துணிகரம்
3 பெண்களிடம் செயின் பறிப்பு பண்ருட்டியில் துணிகரம்
ADDED : ஜூன் 23, 2025 05:41 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் 12 சவரன் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புலவனுார்பேட்டை தெருவை சேர்ந்தவர் மணி. இவர், நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். இவரது துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து அவரது பேரன் அருள்முருகன், 35; இவரது மனைவி சுபஸ்ரீயுடன் வந்தார்.
அன்றைய தினம் மாலை இறுதி சடங்கு முடிந்ததும் குடும்பத்தினர் அனைவரும் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சுபஸ்ரீ அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்தார். உடன், திடுக்கிட்ட அவர் கூச்சலிடேவ அருகில் இருந்தவர்கள், வருவதற்குள் மர்ம நபர் தப்பினார்.
இதையடுத்து பக்கத்து வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சென்னையில் இருந்து துக்க நிகழ்ச்சிக்கு வந்த சிவானந்தன் மனைவி இருச்சம்மாள்,80; என்பவர் அணிந்திருந்த 3 சவரன் செயினையும் மர்ம நபர் பறித்து தப்பினார்.
இதேப் போன்று, அதே தெருவைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் மனைவி அப்ரின் என்பவர் அணிந்திருந்த 2 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறித்து தப்பினார். திருடு போன 12 சவரன் நகைகளின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் ஆகும்.
தகவலறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.